ஹாங்சு: ஆசிய விளையாட்டு கால்பந்தில் இன்று இந்தியா, வலிமையான சீன அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சீனாவின் ஹாங்சுவில் ஆசிய விளையாட்டு செப். 23ல் துவங்குகிறது. இதற்கு முன் கால்பந்து, வாலிபால், படகு போட்டிகள் முன்னதாக துவங்குகின்றன. இன்று துவங்கும் கால்பந்து போட்டியில் மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் வலிமையான சீனா, வங்கதேசம், மியான்மருடன் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் பட்டியலில் ‘டாப்–2’ இடம் பெறும் அணிகள் ‘ரவுண்டு–16’ சுற்றுக்கு முன்னேறும்.
இன்று நடக்கும் முதல் போட்டியில் இந்திய அணி, சீனாவை எதிர்கொள்கிறது.
இந்திய அணியில் கேப்டன் சுனில் செத்ரி இன்று பங்கேற்க மாட்டார். முன்னணி வீரர்கள் சிங்லென்சனா, லால்சுங்நுங்கா விசா தாமதம் காரணமாக முதல் போட்டியில் பங்கேற்க மாட்டர். மற்றபடி ஐ.எஸ்.எல்., கிளப் அணிகள் கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சந்து, ஜின்கன் உட்பட பல முன்னணி வீரர்களை விடுவிக்க மறுத்தன. இதனால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக புதிய அணி அறிவிக்க தாமதம் ஆனது.
இவர்கள் சீனா வந்து சேர்ந்து போதிய பயிற்சி பெறாத நிலையில் நேரடியாக இன்று போட்டியில் பங்கேற்கின்றனர். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.
இந்திய அணி பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கூறுகையில்,‘‘ இப்போட்டியில் வெல்ல முடியவில்லை என்றாலும் அடுத்து வங்கதேசம் (செப். 21), மியான்மரை (செப். 24) சந்திக்கவுள்ள இந்தியா, எப்படியும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு செல்ல முயற்சிக்கும்,’’ என்றார்.
மறுபக்கம் ஆசிய அளவில் வலிமையான சீனா அணி சொந்தமண்ணில் துடிப்பாக செயல்பட காத்திருக்கிறது.
இதற்கு முன்...
கடைசியாக 2002 ஆசிய விளையாட்டில் இந்தியா, சீனா மோதின. இதில் இந்தியா 0–2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
கம்போடியாவுடன் மோதல்
ஆசிய விளையாட்டு ஆண்கள் வாலிபாலில் இந்திய அணி ‘சி’ பிரிவில், தென் கொரியா, கம்போடியாவுடன் இடம் பெற்றுள்ளது. இன்று தனது முதல் போட்டியில் இந்திய அணி, கம்போடியாவுடன் மோதுகிறது.