கோல்கட்டா: துாரந்த் கோப்பை கால்பந்து பைனலுக்கு மோகன் பகான் அணி முன்னேறியது. அரையிறுதியில் 2–1 என, கோவா அணியை வென்றது.
அசாம், மேற்கு வங்கத்தில், துாரந்த் கோப்பை கால்பந்து 132வது சீசன் நடக்கிறது. இதன் பைனலுக்கு ஈஸ்ட் பெங்கால் அணி முன்னேறியது. நேற்று, கோல்கட்டாவில் நடந்த 2வது அரையிறுதியில் கோவா, மோகன் பகான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் கோவா அணியின் நோவா சதாயுய் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 42வது நிமிடத்தில் மோகன் பகான் அணிக்கு கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் ஜேசன் கம்மிங்ஸ் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதி முடிவில் 1–1 என சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் மீண்டும் அசத்திய மோகன் பகான் அணிக்கு 61வது நிமிடத்தில் அர்மான்டோ ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய கோவா அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் மோகன் பகான் அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.
கோல்கட்டாவில், செப். 3ல் நடக்கவுள்ள பைனலில் மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன.
12
துாரந்த் கால்பந்து அரங்கில் மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் அணிகள் 12வது முறையாக பைனலில் மோதுகின்றன. முன்னதாக இவ்விரு அணிகள் விளையாடிய 11 பைனலில், ஈஸ்ட் பெங்கால் 7 முறை வெற்றி பெற்றது. இரண்டு முறை மோகன் பகான் வென்றது. இரண்டு முறை இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. கடைசியாக 2004ல் இவ்விரு அணிகள் பைனலில் மோதின. இதில் ஈஸ்ட் பெங்கால் (2–1) வென்றது. இத்தொடரில் இவ்விரு அணிகள் தலா 16 முறை கோப்பை வென்றுள்ளன.