மும்பை: பெண்கள் பிரிமியர் லீக் போட்டியில் ஏமாற்றிய மும்பை அணி முதல் தோல்வியை பெற்றது. உ.பி., அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வென்றது.
இந்தியாவில், பெண்களுக்கான பிரிமியர் லீக் கிரிக்கெட் முதல் சீசன் நடக்கிறது. நேற்று, மும்பையில் நடந்த லீக் போட்டியில் மும்பை, உ.பி., அணிகள் மோதின. முதல் ஐந்து போட்டியில் வென்ற மும்பை அணி, ஏற்கனவே ‘பிளே–ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. ‘டாஸ்’ வென்ற உ.பி., அணி கேப்டன் அலிசா ஹீலே, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
மும்பை அணிக்கு யஸ்திகா (7), நாட் சிவர்–புருன்ட் (5) ஏமாற்றினர். ஹேலே மாத்யூஸ் (35), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (25), இசி வாங் (32) ஓரளவு கைகொடுத்தனர். மற்றவர்கள் ஏமாற்ற மும்பை அணி 20 ஓவரில் 127 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. உ.பி., சார்பில் சோபி எக்லஸ்டோன் 3 விக்கெட் சாய்த்தார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய உ.பி., அணிக்கு தேவிகா (1), கேப்டன் அலிசா ஹீலே (8), கிரண் நவ்கிரே (12) சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய தஹ்லியா மெக்ராத் (38), கிரேஸ் ஹாரிஸ் (39) கைகொடுத்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டன. இசி வாங் வீசிய 20வது ஓவரின் முதலிரண்டு பந்துகளை வீணடித்த எக்லஸ்டோன், 3வது பந்தை சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். உ.பி., அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 129 ரன் எடுத்து வெற்றி பெற்றது. எக்லஸ்டோன் (16), தீப்தி (13) அவுட்டாகாமல் இருந்தனர். இதன்மூலம் 3வது வெற்றியை பதிவு செய்த உ.பி., அணி, 6 புள்ளிகளுடன் ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.