சென்னை: மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் பைனலில் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பிரக்ஞானந்தா.
‘சாம்பியன்ஸ் செஸ் டூர்’ தொடரின் ஒரு பகுதியாக ‘செஸ்சபிள் மாஸ்டர்ஸ்’ ஆன்லைன் செஸ் தொடர் நடந்தது. இதில், நடப்பு உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி உட்பட 16 பேர் பங்கேற்றனர். உலகத் தரவரிசையில் 116வது இடத்திலுள்ள தமிழகத்தின் பிரக்ஞானந்தா, லீக் சுற்றில் கார்ல்சனை வீழ்த்தினார்.
காலிறுதியில் சீனாவின் இ வெய், அரையிறுதியில் ‘நம்பர்–8’ வீரர் நெதர்லாந்தின் அனிஷ் கிரியை வென்று, பைனலுக்கு முன்னேறினார் 16 வயது பிரக்ஞானந்தா. இதில் உலகின் ‘நம்பர்–2’ வீரர், சீனாவின் டிங் லிரெனை சந்தித்தார்.
பைனல் இரண்டு பிரிவுகளாக நடந்தது. ஒவ்வொரு பிரிவிலும் 4 சுற்று போட்டிகள் நடந்தன. முதல் பிரிவில் நடந்த முதல் போட்டியில் பிரக்ஞானந்தா திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்த, 42 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
அடுத்த போட்டியில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கி அசத்தினார். இதில் 58 வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். ஸ்கோர் 1–1 என சமன் ஆனது.
நான்காவது போட்டியில் பிரக்ஞானந்தா, 39 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். அடுத்து இருவரும் மோதிய நான்காவது போட்டி ‘டிரா’ ஆனது. முதல் பிரிவில் நடந்த 4 போட்டியின் முடிவில் பிரக்ஞானந்தா 1.5–2.5 என்ற கணக்கில் பின்தங்கினார்.