புதுடில்லி: மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா.
‘சாம்பியன்ஸ் செஸ் டூர்’ தொடரின் ஒரு பகுதியாக ‘செஸ்சபிள் மாஸ்டர்ஸ்’ ஆன்லைன் செஸ் தொடர் நடக்கிறது. இதில், நடப்பு உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி உட்பட 16 பேர் பங்கேற்கின்றனர்.
இதன் ஐந்தாவது சுற்றில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். பின் நடந்த 13 வது சுற்றில் அபிமன்யுவை வென்ற பிரக்ஞானந்தார், அமெரிக்காவின் ஷாமிற்கு எதிரான அடுத்த சுற்று போட்டியை ‘டிரா’ செய்தார். 15வது, கடைசி சுற்றில் பிரக்ஞானந்தா, சக வீரர் விதித் சந்தோஷ் குஜ்ராத்தியை 38வது நகர்த்தலில் வீழ்த்தினார்.
ஒட்டு மொத்தமாக ‘டாப்–8’ இடம் பெறும் வீரர்கள் ‘நாக் அவுட்’ (காலிறுதி) சுற்றுக்கு செல்வர் என்ற நிலையில் பிரக்ஞானந்தா, 7 வெற்றி, 4 ‘டிரா’ செய்து, 25 புள்ளிகள் பெற்று நான்காவது இடம் பிடித்தார்.
நெதர்லாந்தின் அனிஷ் கிரி (29), கார்ல்சன் (28), சீனாவின் டிங் லிரென் (25) முதல் மூன்று இடம் பிடித்தனர். 7 சுற்று கொண்ட காலிறுதி போட்டியில் பிரக்ஞானந்தா, சீனாவின் இ வெய்யை சந்திக்கவுள்ளார்.
இந்தியாவின் ஹரிகிருஷ்ணா (18), விதித் சந்தோஷ் குஜ்ராத்தி (17) 9, 10 வது இடம் பிடித்து வெளியேறினர்.