வாஸ்கோடகாமா: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி 2–0 என, மும்பை அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 7வது சீசன் கோவாவில் நடக்கிறது. வாஸ்கோடகாமாவில் நடந்த லீக் போட்டியில் மும்பை, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ஜாம்ஷெட்பூர் அணிக்கு 72வது நிமிடத்தில் போரிஸ் சிங் ஒரு கோலடித்தார். தொடர்ந்து அசத்திய ஜாம்ஷெட்பூர் அணிக்கு ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+1வது நிமிடம்) டேவிட் கிராண்ட் ஒரு கோலடித்தார். கடைசி வரை போராடிய மும்பை அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஜாம்ஷெட்பூர் அணி 19 போட்டியில், 6 வெற்றி, 6 ‘டிரா’, 7 தோல்வி என, 24 புள்ளிகளுடன் 6வது இடத்துக்கு முன்னேறியது. மும்பை அணி, 18 போட்டியில், 10 வெற்றி, 4 ‘டிரா’, 4 தோல்வி என, 34 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.