நாக்பூர்: ரஞ்சி கோப்பை பைனலில் விதர்பா அணி பவுலர்கள் அசத்த, புஜாரா, ஸ்னெல் படேல் உள்ளிட்ட முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்த சவுராஷ்டிரா அணி ரன் சேர்க்க முடியாமல் திணறியது.
நாக்பூரில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பைனலில் ‘நடப்பு சாம்பியன்’ விதர்பா, சவுராஷ்டிரா அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் விதர்பா 312, சவுராஷ்டிரா 307 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் விதர்பா அணி 2 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்திருந்தது. கணேஷ் சதிஷ் (24), வாசிம் ஜாபர் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஜடேஜா அசத்தல்: நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த விதர்பா அணிக்கு, தர்மேந்திராசின் ஜடேஜா தொல்லை தந்தார். இவரது ‘சுழலில்’ அனுபவ வாசிம் ஜாபர் (11), கணேஷ் சதிஷ் (35) சிக்கினர். அக்சய் வாத்கர் (0), அக்சய் கர்னேவர் (18) நிலைக்கவில்லை. மோகித் காலே (38), ஆதித்யா சர்வாதே (49) ஆறுதல் தந்தனர். அக்சய் வகாரே (1), உமேஷ் யாதவ் (15) ஏமாற்றினர்.
இரண்டாவது இன்னிங்சில் விதர்பா அணி 200 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. ராஜ்னீஷ் குர்பானி (3) அவுட்டாகாமல் இருந்தார். சவுராஷ்டிரா அணி சார்பில் தர்மேந்திராசின் ஜடேஜா 6 விக்கெட் கைப்பற்றினார்.
புஜாரா ஏமாற்றம்: பின், 206 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய சவுராஷ்டிரா அணிக்கு ஆதித்யா சர்வாதே நெருக்கடி தந்தார். இவரது ‘சுழலில்’ ஹார்விக் தேசாய் (8), ஸ்னெல் படேல் (12), சீனியர் வீரர் புஜாரா (0) ஆட்டமிழந்தனர். ஆர்பித் வசவதா (5), ஷெல்டன் ஜாக்சன் (7) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.
நான்காம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் சவுராஷ்டிரா அணி 5 விக்கெட்டுக்கு 58 ரன் எடுத்து, 148 ரன் பின்தங்கி இருந்தது. விஷ்வராஜ் ஜடேஜா (23), காம்லேஷ் மக்வனா (2) அவுட்டாகாமல் இருந்தனர். விதர்பா அணி சார்பில் ஆதித்யா சர்வாதே 3 விக்கெட் வீழ்த்தினார்.