ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற தொடர் 1–1 என சமனில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று மெல்போர்னில் நடந்தது.
‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி ‘பவுலிங்’ தேர்வு செய்தார். அம்பதி ராயுடு, குல்தீப் யாதவ், கலீல் அகமது நீக்கப்பட்டு கேதர் ஜாதவ், சகால் சேர்க்கப்பட்டனர். தமிழகத்தின் விஜய் ஷங்கர் அறிமுக வாய்ப்பு பெற்றார்.
சகால் கலக்கல்
ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச், அலெக்ஸ் கேரி ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. ‘வேகத்தில்’ மிரட்டிய புவனேஷ்வர், முதலில் அலெக்ஸ் கேரியை (5) வெளியேற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், இத்தொடரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பின்ச்சை (14) அவுட்டாக்கினார். ‘சுழலில்’ கலக்கிய சகால் தனது முதல் ஓவரில், ஷான் மார்ஷ் (39), கவாஜாவை (34) அவுட்டாக்கினார். தொடர்ந்து ஸ்டாய்னிசையும் (10) வெளியேற்றினார். மேக்ஸ்வெல் (26) ஏமாற்றினார். மீண்டும் மிரட்டிய சகால், இம்முறை ஹேண்ட்ஸ்கோம்ப் (58), ஜாம்பாவை (8) அவுட்டாக்கினார். ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவரில் 230 ரன்னுக்கு ஆல் அவுட்டானாது.
சகால் 6 விக்கெட் சாய்த்தார்.
கோஹ்லி ஏமாற்றம்
இந்திய அணிக்கு ரோகித் சர்மா (9), ஷிகர் தவான் (23) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. கோஹ்லி, 46 ரன்னுக்கு அவுட்டாக இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின் பொறுப்பாக ஆடிய தோனி ஒருநாள் அரங்கில் 70வது அரைசதம் எட்டினார். ஆஸ்திரேலியாவில் இவர் அடித்த 8வது அரைசதம் இது. ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்த கேதர் ஜாதவ், ஸ்டாய்னிஸ் பந்தில் பவுண்டரி அடித்து தனது 4வது அரைசதம் எட்டினார். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 121 ரன் சேர்த்து வெற்றியை உறுதி செய்தனர். இந்தியா 49.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 234 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரை 2–1 என கைப்பற்றியது. தோனி (87), கேதர் ஜாதவ் (61) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஆட்டநாயகன் விருதை சகால் வென்றார்.
‘டெட் பால்’ சரியா
நேற்று 9வது ஓவர் கடைசி பந்தை, கிரீசிற்குள் வராமல் சற்று துாரம் நின்ற அம்பயருக்கு அருகே இருந்து வீசினார் புவனேஷ்வர் குமார். இதைப் பார்த்த பின்ச் கடைசி நேரத்தில் விலகிக் கொண்டார். குறிப்பிட்ட இடத்தில் இருந்து தான் வீசி வேண்டும் என எந்த விதியும் இல்லாத நிலையில் அம்பயர் ‘டெட் பால்’ என்று அறிவிக்க புவனேஷ்வர் கோபம் கொண்டார்.
அதிர்ஷ்டம் அதிகம்
நேற்று தோனி சந்தித்த முதல் பந்தில் மேக்ஸ்வெல் தயவில் ‘கேட்ச்’ வாய்ப்பில் இருந்து தப்பினார். 9, 12 ரன்னில் என இரு முறை ரன் அவுட்டாகாமல் நழுவினார். 34 ரன் எடுத்த போது சிடில் வீசிய பந்தை சந்தித்தார். இதை விக்கெட் கீப்பர் கேரி பிடித்த போதும், அவுட் கேட்கவில்லை. ‘ஹாட் ஸ்பாட்’ தொழில்நுட்பத்தில் பந்து தோனி பேட்டில் பட்டுச் சென்றது தெளிவாகத் தெரிந்தது. மற்ற ஆஸ்திரேலிய வீரர்களும் கண்டு கொள்ளவில்லை. பின் 74 ரன்னில் இவர் கொடுத்த ‘கேட்சை’ பின்ச் கோட்டை விட, 5வது முறையாக தப்பிய தோனி, கடைசியில் 87 ரன் எடுத்தார்.
மழை தொல்லை
நேற்று மழை காரணமாக போட்டி துவங்க 10 நிமிடம் தாமதம் ஆனது. அடுத்து 2 பந்துகள் மட்டும் வீசப்பட்ட நிலையில் மீண்டும் மழை வந்தது. 22 நிமிடத்துக்கு பின் மீண்டும் துவங்கியது.